ஜம்மு-காஷ்மீர், பஹல்காம் பகுதியில் நடந்த விபத்தில் பாதுகாப்புப் படையினர் 6 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீர், பஹல்காம் அருகே இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையின் 32 வீரர்கள் அமர்நாத் யாத்திரை பணியை முடித்துவிட்டுத் திரும்பும்போது பேருந்து திடீரென பழுதானதால் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 6 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு ஹெலிகாப்டர் மூலம் அனந்த்நாக் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
பஹல்காமில் ஐடிபிபி பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது என்று இந்தியில் டீவீட் செய்துள்ளார் ராகுல்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், வீரர்களின் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் கூறினார்.