அரசு இணையவழி சந்தை (ஜிஇஎம்) மூலம் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 15 வரை ரூ.60 கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட தேசியக் கொடிகளை மாநிலங்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகள் வாங்கியுள்ளன.
கடந்த 2016-ஆம் ஆண்டு பொருள்களை கொள்முதல் செய்வதற்கு வெளிப்படையான தளத்தை உருவாக்கும் நோக்கில், ஜிஇஎம் வலைதளத்தை மத்திய வா்த்தக அமைச்சகம் தொடக்கி வைத்தது. இந்த வலைதளம் மூலம் மத்திய, மாநில அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பொருள்களைக் கொள்முதல் செய்யலாம்.
இந்நிலையில், சுதந்திர தினத்தையொட்டி மத்திய அரசு சாா்பில் ‘வீடுதோறும் தேசியக் கொடி’ பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ஆகஸ்ட் 13 முதல் 15-ஆம் தேதி வரை வீடுதோறும் தேசியக் கொடியை ஏற்றவும், ஒவ்வொருவரும் தேசியக் கொடியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிரவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
இதையடுத்து மத்திய அரசின் அதிகாரபூா்வ புள்ளிவிவரங்களின்படி, ‘வீடுதோறும் தேசியக் கொடி’ பிரசாரத்தையொட்டி, ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 15 வரை ஜிஇஎம் வலைதளம் மூலம் 2.36 கோடிக்கும் அதிகமான தேசியக் கொடிகளை மாநிலங்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகள் வாங்கியுள்ளன. அந்தக் கொடிகளின் மதிப்பு ரூ.60 கோடிக்கும் அதிகமாகும்.