பாஜக தலைவர் ஷாநவாஸ் ஹுசைன் மீது 2018ஆம் ஆண்டு நடந்த பலாத்கார வழக்கு குறித்து முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்ய தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த பலாத்கார வழக்கு மீது விசாரணை தொடங்கி மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் காவல்துறைக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க | அம்பானி வீடு இல்லை.. ஆர்டிஓ வீடு; மலைத்துப் போன அதிகாரிகள் (விடியோ)
முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டு கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஷாநவாஸ் ஹுசைன் தில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார் நீதிபதி.
மேலும் நீதிபதி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது, பாஜக தலைவர் ஷாநவாஸ் ஹுசைன் மீது பலாத்கார வழக்குப் பதிவு செய்ய, காவல்துறை தயக்கம் காட்டியிருப்பது ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பாஜக தலைவர் ஷாநவாஸ் ஹுசைன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், புகார் அளித்தால் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் கூறி, இது குறித்து அவர் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யுமாறு உத்தரவிடக் கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த கீழமை நீதிமன்றம், முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இந்த நிலையில், அவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். தில்லி உயர் நீதிமன்ற, ஷாநவாஸ் ஹுசைனின் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் ஷாநவாஸ் ஹுசைன் தரப்பு வழக்குரைஞர் கோரிக்கை வைத்துள்ளார். அதில், ஷாநவாஸ் ஹுசைன் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்த முதல் தகவல் அறிக்கை அவரது புகழை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த மனுவை அடுத்த வாரம் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.