குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோரை முதல்வர் மு.க.ஸ்டாலின் தில்லியில் புதன்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை இரவு தில்லி வந்தார்.
தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த அவர், புதன்கிழமை காலையில் 11.30 மணியளவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
குடியரசுத் தலைவருக்கு பூங்கொத்து கொடுத்து பொன்னாடை அளித்து வாழ்த்திய முதல்வர், சமீபத்தில் மாமல்லபுரத்தில் நடந்து முடிந்த 44-ஆவது ஒலிம்பியாட் போட்டிகள் தொடர்பான காஃபி டேபிள் புக்கான "ஹோம் ஆஃப் செஸ்' என்கிற புத்தகத்தையும் வழங்கினார்.
முன்னதாக, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரை அவரது இல்லத்தில் காலை 10.30 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
குடியரசுத் தலைவரையும், துணைத் தலைவரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது தமிழகத்தின் மரபு தானியங்கள் தொகுப்பு அடங்கிய பெட்டகத்தையும் ஸ்டாலின் வழங்கினார்.
நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, முதல்வரின் செயலர் உதயசந்திரன் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
இதன்பின்னர், முதல்வர் ஸ்டாலின் தில்லி டிடியு மார்கில் உள்ள திமுக கட்சி அலுவலகமான அண்ணா-கலைஞர் அறிவாலயத்துக்குச் சென்றார். அங்கு முரசொலி மாறனின் பிறந்த நாளையொட்டி அவரது உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியின்போது தமிழக முதல்வரிடம் தன் கதைத் தொகுப்பின் ஆங்கில மொழியாக்கத்தை தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி. வழங்கினார்.
தில்லி தமிழ்நாடு இல்ல சிறப்பு பிரதிநிதி விஜயன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.