பாஜகவுக்கு சிபிஐ, அமலாக்கத்துறை என இரு கைகள் இருப்பதாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சௌகதா ராய் தெரிவித்துள்ளார்.
மதுபான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீடு உள்பட சுமார் 20 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தில்லி முதல்வர் கேஜரிவால், ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
'உலகின் சிறந்த கல்வி அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள மணீஷ் சிசோடியாவின் வீட்டில் சிபிஐ சோதனை நடைபெறுகிறது. இது முதல் சோதனை இல்லை. இதற்கு முன்னால் பல சோதனை நடத்தப்பட்டுள்ளன, இந்த சோதனையிலும் எதுவும் கிடைக்காது' என்று கேஜரிவால் கூறியிருந்தார்.
அதுபோல இந்த சோதனைகளால் என்னுடைய பணியைத் தடுக்க முடியாது என்று மணீஷ் சிசோடியா ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சௌகதா ராய், 'பாஜகவுக்கு இரண்டு கைகள் இருக்கின்றன. ஒன்று சிபிஐ, இன்னொன்று அமலாக்கத் துறை. மேற்குவங்கத்திலும் மகாராஷ்டிரத்திலும் அவர்கள் இதைத் தான் செய்தார்கள். சத்யேந்தர் ஜெயினுக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை மேற்கொண்டார்கள். எதிர்க்கட்சிகளை ஒடுக்கப் பயன்படுத்தும் உத்தி இது. வழக்கம்போல ரெய்டில் எதுவும் கிடைக்காது' என்று கூறியுள்ளார்.
தங்கள் கட்சியினர் மீதான மத்திய பாஜக அரசின் சிபிஐ, அமலாக்கத்துறை சோதனைகளுக்கு எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.