விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், தில்லியில் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
காவல் துறையினர் தடுப்புகளை அமைத்து சோதனையில் ஈடுபட்ட பிறகு வாகனங்களை அனுமதிப்பதால்தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், விவசாயிகளின் போராட்டத்தால் அல்ல எனவும் விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயக் கடன் தள்ளுபடி, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து தில்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து விவசாயிகள், பொதுமக்கள் என பலர் ஜந்தர் மந்தர் பகுதியை நோக்கி படையெடுத்தனர்.
இதனிடையே போராட்டத்திற்கு வரும் வாகனங்களை எல்லைப் பகுதியில் நிறுத்தி காவல் துறையினர் சோதனை செய்த பிறகே அனுமதிக்கின்றனர்.
இதனால், உத்தரப்பிரதேசம் - தில்லி எல்லைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நொய்டா - சில்லா எல்லையில் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதேபோன்று தில்லி - மீரட் சாலையிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
காவல் துறையினர் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்த பிறகே அனுமதிக்கின்றனர். இந்த நெருக்கடியான சூழலை சமாளிக்க கூடுதல் போக்குவரத்து காவலர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தில்லி போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல், விவசாயிகளின் போராட்டத்தால் ஏற்படவில்லை என்றும், காவல் துறையினர் பரிசோதனையினாலே ஏற்பட்டுள்ளதாகவும் விவசாய சங்கம் விளக்கம் அளித்துள்ளது.