ராமர் பாலம் வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவின் விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவின் விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ராமர் பாலம் என்பது தமிழகத்தின் தென்கிழக்கு கடலோரப் பகுதியான ராமேசுவரம் தீவு என்றழைக்கப்படும் பாம்பன் தீவிலிருந்து இலங்கையின் வடமேற்கு கடற்கரையில் உள்ள மன்னார் வளைகுடாவுக்கு இடையே உள்ள சுண்ணாம்புப் பாறைகளால் ஆன சங்கிலித் தொடர் பாலம் ஆகும்.

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்தப் பகுதியில் சேதுசமுத்திரம் கால்வாய்த் திட்டத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. அப்போது, சுண்ணாம்புப் பாறைகளால் உருவாக்கப்பட்டிருப்பது ராமர் பாலம் என்றும், இதனை அகற்றி சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும், இதனை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், 2007-ஆம் ஆண்டில் சேது சமுத்திரம் கால்வாய்த் திட்டத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இந்தத் திட்டம் சமூக-பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்பட்டதாகவும், தற்போதுள்ள ராமர் பாலத்தைச் சேதப்படுத்தாமல் மாற்று வழியில் ராமர் பாலத்தை ஏற்படுத்தி இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அப்போதைய மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது.

இதையடுத்து புதிய திட்டத்தை தயார்செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தைச் செயல்படுத்த சில அரசியல் கட்சிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், சில ஹிந்து அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், 2019, நவ. 13-இல் உச்சநீதிமன்றம், சேது கால்வாய் திட்டம் தொடர்பான தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த மத்திய அரசுக்கு 6 வார காலம் அவகாசம் வழங்கியது. மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால், நீதிமன்றத்தை அணுக சுப்பிரமணியன் சுவாமிக்கு அனுமதியும் வழங்கியது.

இதுதொடர்பான மனு கடந்த பல மாதங்களாக விசாரணைக்கு ஏற்கப்படாமல் உள்ளதாகவும், தனது கோரிக்கையைப் பரிசீலிக்க சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் 2017-இல் ஒரு கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்ததாகவும், ஆனால் அதன்பிறகு எதுவும் நடக்கவில்லை என்று தெரிவித்து சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இந்த மனு ஆகஸ்ட் 22(இன்று) விசாரணைக்கு வந்தது.  அரசின் கொள்கை சார்ந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டுமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றுக் கூறி வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com