ராஜஸ்தானில் வேலையில்லா திண்டாட்டத்தால், 11 மாத குழந்தையை தந்தையே கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
குழந்தையை கால்வாயில் வீசிக் கொன்றுவிட்டு, நாடகமாடிய தந்தையை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜலோர் மாவட்டம் நலோதார் பகுதியில் வசித்து வருபவர் முகேஷ். 24 வயதான இவர் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.
முகேஷ் காதல் திருமணம் செய்துகொண்ட பிறகு அகமதாபாத்தில் காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனிடையே ஏழு மாதங்களுக்கு முன்பு வேலையிழந்துள்ளார். இதனால், பொருளாதார ரீதியாக குடும்பத்தை நடத்துவதற்கு மிகுந்த சிரமமடைந்துள்ளார்.
இந்நிலையில், குடும்பத்தை நடத்த இயலாததால், தனது 11 மாத குழந்தையை கால்வாயில் வீசிக் கொன்றுள்ளார். இதனை தனது வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள காவலர் ஒருவர் கவனித்து, குழந்தை குறித்து கேட்டுள்ளார்.
குழந்தையை தாத்தா, பாட்டியிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டதில், குழந்தையை கால்வாயில் வீசிக் கொன்றதை ஒப்புக்கொண்டார். மேலும், குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முயன்றதாகவும், ஆள்கள் நடமாட்டம் அதிகம் இருந்ததால், தற்கொலை செய்துகொள்ளவில்லை எனவும் காவல் துறை விசாரணையில் தெரிவித்துள்ளார்.