அசாம் முதல்வர் தொடுத்த அவதூறு வழக்கில் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சில மாதங்களுக்கு முன்பு தில்லியில் செய்தியாளர் சந்திப்பில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா மீது குற்றம்சாட்டியிருந்தார்.
2020 ஆம் ஆண்டில் கரோனா தொற்றுநோய் பரவலின்போது, சந்தை விலைக்கு அதிகமாக பிபிஇ கருவிகளை வாங்க, அசாம் முதல்வர் அவரது மனைவி மற்றும் மகனின் வணிக பங்குதாரருக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதாக குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தொடுத்த அவதூறு வழக்கில் கம்ரூப் மாவட்ட முதன்மை நீதிமன்றம், தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நேரில் ஆஜராகக் கோரி சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னதாக, மதுபானக் கடைகளுக்கான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, ஐஏஎஸ் அதிகாரி, மூத்த அதிகாரிகளின் 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினா். இந்த வழக்கில் 15 போ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள சிபிஐ, அதில் முதல் நபராக மணீஷ் சிசோடியாவை சோ்த்துள்ளது. இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க | தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்