நபிகள் நாயகத்தையும் இஸ்லாமியர்களையும் பாஜக வெறுப்பதாக மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சி அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
மேலும், இஸ்லாமியர்களுடன் நேரடி அரசியலில் மோதாமல், இழிவான அரசியலில் பாஜக ஈடுபடுவதாகவும் விமர்சித்தார்.
தெலங்கானாவில் கோஷாமால் தொகுதியின் பாஜக எம்எல்ஏவான ராஜா சிங், இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களைப் பேசியதாக விடியோ ஒன்றை பதிவிட்டார்.
இந்த விடியோவில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய நூபுர் சர்மாவின் கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டதாகக் கூறி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ராஜா சிங்கை தெலங்கானா காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங் சர்ச்சைக் கருத்து குறித்து பேசிய ஹைதராபாத் எம்.பி. ஓவைசி, நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய ராஜா சிங் கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
முகமது நபியையும் இஸ்லாமியர்களையும் பாஜக வெறுக்கிறது. அவர்கள் இந்தியாவின் சமூக, இறையான்மையை கட்டமைப்பை உடைப்பதையே இலக்காக கொண்டுள்ளனர். எங்களுடன் நேரடியாக அரசியலில் மோதுங்கள். அதைவிட்டு கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடாதீர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.