மும்பை: மும்பையில் உள்ள நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மும்பையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியின் தொலைபேசி எண்ணுக்கு அழைத்த மர்ம நபர், 4 இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், இந்த வெடிகுண்டை அகற்ற ரூ. 5 கோடி தரவேண்டும் எனவும் நேற்று மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடத்திய காவல்துறையினர், குஜராத்தை சேர்ந்த இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க | ‘ஐஎன்எஸ் விக்ராந்த்’ சிறப்பம்சங்கள் என்னென்ன?
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை மும்பை போக்குவரத்துக் காவல்துறையின் உதவி எண்ணுக்கு பாகிஸ்தான் எண்ணிலிருந்து வாட்ஸ்ஆப்பில் அடுத்தடுத்து பல தகவல்கள் வந்தது. அதில், மும்பையை வெடிகுண்டு வைத்து வெடிக்கச் செய்வதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தொடர் வெடிகுண்டு மிரட்டல் சம்பத்தை அடுத்து, மும்பையில் உள்ள வணிக வளாகங்கள், கடற்கரைகள் உள்ளிட்ட பொது இடங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.