ஒடிசாவில் கடந்த ஓரிரு தினங்களில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பரிதாபமாக பலியாகியுள்ளன.
இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஒடிசாவின் கியோஞ்கர் மாவட்டத்தில் இரண்டு பெண் யானைகள் மின்சாரம் பாய்ந்து பலியாகின. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 27) அங்குல் மாவட்டத்தில் மேலும் ஒரு யானை மின்சாரம் பாய்ந்து பலியாகியுள்ளது.
இந்த சம்பவம் அங்குல் மாவட்டத்தில் உள்ள சட்கோஷியா வன விலங்குகள் சரணாலயத்திலிருந்து 500 மீட்டருக்கு அப்பால் நிகழ்ந்துள்ளது. வனப் பகுதியில் விலங்குகளை பிடிப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியினாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இது குறித்து அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வனத்துறை அதிகாரிகள் வனவிலங்குகளை பிடிப்பதற்காக மின்சாரக் கம்பியினை பயன்படுத்துபவர்களைப் பிடிக்க தீவிரமாக இறங்கியுள்ளது. இது தொடர்பாக பலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒடிசாவில் கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து 2022 வரை 63 யானைகள் மின்சாரம் பாய்ந்து பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.