தில்லி - சிம்லா வழித்தடத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பர் 6ஆம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கவுள்ளது.
விமான ஒப்பந்தம் முடிந்ததன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் இந்த வழித்தடத்தில் விமான சேவை தொடங்கவுள்ளது.
தில்லி - சிம்லா வழித்தடத்தில் அல்லையன்ஸ் ஏர் நிறுவனம் சார்பில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏர் இந்தியாவின் கிளை நிறுவனமான, அல்லையன்ஸ் ஏர் நிறுவனத்தின் விமான ஒப்பந்தம் இரண்டு ஆண்டுகளில் முடிந்ததால் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு தில்லி - சிம்லா இடையே சுற்றுலா பயணிகளுக்காக ஹெலிடேஸி சேவை மட்டுமே வழங்கப்பட்டுவந்தது.
தற்போது இந்த வழித்தடத்தில் செப்டம்பர் 6ஆம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்படவுள்ளது. தில்லியில் காலை 6.25 மணிக்கு புறப்படும் விமானம் காலை 7.35 மணிக்கு சென்றடையும். அதனைத் தொடர்ந்து சிம்லாவில் காலை 8 மணிக்கு புறப்படும் விமானம் 9.10 மணிக்கு தில்லி வந்தடையும். இதற்கு ரூ.2,480 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.