அகில இந்திய தரவரிசைப் பட்டியலின்படி நாளை நடைபெற இருந்த நீட் முதுகலை கலந்தாய்வு செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 21-ம் தேதி நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் ஜூன் 2ஆம் தேதி வெளியாகின.
தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து 50 சதவிகித அகில இந்திய மருத்துவ இடங்களுக்கும், 50 சதவிகித மாநில இடங்களுக்கும் கலந்தாய்வு வரும் செப்டம்பர் 1ஆம் தேதி நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தரவரிசைப் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும், மதிப்பெண் மறுமதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் மாணவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் கலந்தாய்வு திட்டமிட்டபடி நடைபெறும். ஒத்திவைக்க முடியாது என நீதிபதி சந்திரசூட் அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நாளை நடைபெற இருந்த நீட் முதுகலை கலந்தாய்வு செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
நீட் முதுகலை கலந்தாய்வில் மேலும் கூடுதல் இருக்கைகளை சேர்ப்பது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.