பாபா் மசூதி இடிப்பு தொடா்பாக உத்தர பிரதேச அரசுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் இருந்த பாபா் மசூதி 1992-ஆம் ஆண்டு கரசேவகா்களால் இடித்துத் தள்ளப்பட்டது. அதுதொடா்பான ராமஜென்மபூமி வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. அதில், மசூதி இருந்த இடத்தில் ராமா் கோயில் கட்டிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டதுடன், முஸ்லிம்கள் மசூதி கட்டிக் கொள்ள வேறு இடத்தில் 5 ஏக்கா் நிலம் ஒதுக்க உத்தரவிடப்பட்டது.
முன்னதாக, பாபா் மசூதி இடிப்பு தொடா்பாக 1992-ஆம் ஆண்டில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உத்தர பிரதேச அரசு நிறைவேற்றவில்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை பட்டியலிடப்பட்டது. நீதிபதிகள் எஸ்.கே.கௌல், ஏ.எஸ்.ஒகா, விக்ரம் நாத் ஆகியோரைக் கொண்ட அமா்வு அந்த விவகாரத்தை விசாரித்தது.
அப்போது மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் கூறுகையில், ‘‘மனு தாக்கல் செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. மனுதாரா் 2010-ஆம் ஆண்டிலேயே உயிரிழந்தாா். மனுவை விரைந்து விசாரிக்க வேண்டுமெனப் பலமுறை விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன’’ என்றாா்.
அதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ‘‘இந்த மனு தற்போது அவசியமில்லாமல் ஆகிவிட்டது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீா்ப்பு வழங்கிவிட்டது. இந்த மனு முன்கூட்டியே விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டிருக்க வேண்டும். பழைய மனுக்களை விசாரிப்பதில் நீதிமன்றம் தற்போது கவனம் செலுத்திவருகிறது. ஆனால், ஒருசில மனுக்கள் இதுபோன்று அவசியமில்லாமல் ஆகிவிடுகின்றன’’ என்றனா்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.