முன்னதாகவே முடிவடையும் ராகுலின் நடைப்பயணம்? காரணம் இதுதானா?

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை நடைப்பயணத்தை குடியரசு தினத்தில் முடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாகவே முடிவடையும் ராகுலின் நடைப்பயணம்? காரணம் இதுதானா?

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை நடைப்பயணத்தை குடியரசு தினத்தில் முடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராகுல் காந்தி தலைமையிலான இந்த ஒற்றுமை நடைப்பயணம் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியிலிருந்து தொடங்கியது. அதன்பின், கேரளம், கர்நாடகம் எனப் பயணித்து தற்போது மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து வருகிறது. செப்டம்பர் 7ல் தொடங்கப்பட்ட இந்த நடைப்பயணம் ஸ்ரீநகரில் மூவர்ணக் கொடியேற்றி பிப்ரவரி 20ஆம் தேதி முடிவடைவதாக இருந்தது. 

இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு இந்த ஒற்றுமை நடைப்பயணம் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே முடிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 3,500 கிலோ மீட்டர் தொலைவிலான இந்தப் பயணம் குடியரசு தினத்தில் காஷ்மீரில் தேசியக் கொடியேற்றத்துடன் முடிவடைய உள்ளதாகத் தெரிகிறது. இந்த புதிய மாற்றத்தின்படி ஜனவரி 26ல் குடியரசு தினத்தன்று ராகுல் காந்தி இந்த ஒற்றுமை நடைப்பயணத்தை கொடியேற்றத்துடன்  முடித்து வைக்க உள்ளதாகத் தெரிகிறது.

அதன்பின், காங்கிரஸ் சார்பில் முக்கிய ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி ஒற்றுமை நடைப்பயணத்தில் ஈடுபட்டிருக்கும்போது முக்கிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்த முடியாது எனவும், அதன் காரணத்தினாலேயே அவரது இந்த நடைப்பயணம் குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இருப்பினும், இது குறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. காங்கிரஸ் இந்த நடைப்பயணத்தை ஜனவரி 26ல் முடிக்க நினைக்கும் பட்சத்தில் தினசரி நடைப்பயணத்தின் தொலைவு அதிகரிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com