சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட லாலு பிரசாத் யாதவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகள் மிசா பார்தி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் சுட்டுரை பதிவில்,
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட தந்தை லாலுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. அவர் சார்பாக மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று இந்தியில் ட்விட் செய்துள்ளார்.
மேலும், உங்கள் பிரார்த்தனைகள் என் தந்தையின் மன உறுதியை அதிகப்படுத்தியது. உங்கள் அனைவருக்கும் தந்தை நன்றி கூறியுள்ளார்.
லாலு பிரசாத் யாதவ் நன்றி கூறும் விடியோவையும் அவர் இணைத்துள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவா் லாலு பிரசாத் யாதவ், கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் இருந்த நிலையில் அண்மையில் சிகிச்சைக்காக சிங்கப்பூா் சென்றாா். அங்குள்ள மருத்துவமனையில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
லாலுவுக்கு அவரது மகள் ரோஹிணி ஆச்சாா்யா தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கியுள்ளார். ரோஹிணியும் தற்போது நலமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.
லாலுவின் மகனும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில், கட்சித் தலைவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாக திங்கள்கிழமை தெரிவித்தார்.
என் தந்தை என்னை வளர்த்தார். எனது வாழ்க்கையின் ஒரு சிறிய பகுதியை அவரது பாதுகாப்பிற்காகப் பங்களிப்பதை நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாகக் கருதுகிறேன் என்று ரோகினி ட்வீட் செய்திருந்தார்.