நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் மத்திய அரசிடம் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
குஜராத், ஹிமாசல பிரதேச மாநிலங்களின் சட்டப்பேரவைத் தோ்தல்கள் மற்றும் 6 சட்டப்பேரவை மற்றும் ஒரு மக்களவை தொகுதிகளின் இடைத்தோ்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக நாளை குளிா்கால கூட்டத் தொடா் தொடங்குகிறது.
இந்நிலையில், முக்கியத் தீா்மானங்கள், விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு இன்று கூட்டியது.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற விவாகரத் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி, திமுக மக்களவைத் தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குளிர்கால கூட்டத்தொடரில், இந்திய தேர்தல் ஆணையரை ஒரேநாளில் நியமித்தது, வேலையிண்மை மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேபோல், விலை உயர்வு, சிபிஐ, அமலாக்கத்துறை போன்றவற்றை தவறாக பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று திரிணாமூல் காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குளிர்கால கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்துவதற்கு 16 புதிய மசோதாக்களை மத்திய அரசு கடந்த வாரம் பட்டியலிட்டது. கூட்டத்தொடா் சுமுகமாக நடைபெறுவதை உறுதிப்படுத்த ஒத்துழைப்பு அளிக்குமாறு கட்சித் தலைவா்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
டிசம்பா் 29-ஆம் தேதி வரை 23 நாள்கள் நடைபெறும் குளிா்கால கூட்டத்தொடரில் 17 அமா்வுகள் இடம்பெற உள்ளன.