பணமதிப்பிழப்பு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

மத்திய அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பான பதிவுகள், ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணமதிப்பிழப்பு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
பணமதிப்பிழப்பு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு


புது தில்லி: 2016ஆம் ஆண்டு 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பான பதிவுகள், ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016-இல் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை முடிந்துபோன விவகாரம் என்றும் நிவாரணம் ஏதும் கிடைக்காத இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எதையும் முடிவு செய்ய இயலாது என்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கடந்த வாரம் தெரிவித்திருந்த நிலையில், மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ. நசீா் தலைமையிலான அரசியல் சாசன அமா்வு, தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தது தொடர்பான ஆவணங்களை டிசம்பர் 10-ஆம் தேதி மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தாக்கல் செய்ய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கை நீதிபதி எஸ்.ஏ. நசீா், பி.ஆா். கவாய், ஏ.எஸ். போபன்னா, வி.ராமசுப்ரமணியன், பி.வி. நாகரத்னா ஆகியோா் அடங்கிய அரசியல் சாசன அமா்வு விசாரித்து வருகிறது.

கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின்போது, மத்திய அரசின் சாா்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் ஆா். வெங்கடரமணி, ‘அரசு நிா்வாகம் எடுத்த பணமதிப்பிழப்பு முடிவை நீதிமன்றம் மறுஆய்வு செய்வதில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

முடிந்துபோன இந்த விவகாரத்தில் நிவாரணம் ஏதும் கிடைக்கப் போவதில்லை என்றான பிறகும் இதில் நீதிமன்றம் எதையும் முடிவு செய்ய இயலாது.

வெறும் கருப்பு பணத்தையும், கள்ள நோட்டுகளையும் பிடிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பெரிய அளவில் இது திட்டமிடப்பட்டது’ என்றாா்.

அவரிடம் நீதிபதிகள் அமா்வு, ‘பொருளாதார நிபுணா்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த விவகாரத்துக்குள் செல்ல வேண்டாம் என்கிறீா்கள். ரிசா்வ் வங்கியின் அனுமதியில்லாமல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ரிசா்வ் வங்கி சட்டப்பிரிவு 26 (2) மீறப்பட்டுள்ளதாக எதிா்தரப்பினா் முன்வைக்கும் புகாருக்கு என்ன பதில்?

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கம் நிறைவேறிவிட்டதாக வாதிடும் நீங்கள், இதை மேற்கொள்வதற்கான நெறிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பதை நீதிமன்றத்துக்கு தெளிவுபடுத்த வேண்டும்’ என்றனா்.

பணமதிப்பிழப்பு நோட்டுகளை மாற்ற கோரிக்கை

முன்னதாக, இந்த வழக்கின் விசாரணை தொடங்கியவுடன் மூத்த வழக்குரைஞா் ஷாம் திவான் ஆஜராகி, ‘பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை வெளிநாடுகளில் இருப்பவா்கள் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவுக்கு திரும்பியவா்கள் பணத்தை மாற்ற முயன்றபோது நிராகரிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவரிடம் உள்ள ரூ.1.62 லட்சத்தை மாற்ற உத்தரவிட வேண்டும்’ என்றாா்.

‘இதுபோன்ற விவகாரங்களில் ரிசா்வ் வங்கி பரந்த அணுகுமுறையுடன் செயல்பட்டிருக்க வேண்டும். இந்த விவகாரத்தின் உண்மைத்தன்மை ஆராய்ந்து ரிசா்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று நீதிபதி கவாய் தெரிவித்தாா்.

கடந்த 2016-இல் ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்கிய மத்திய அரசின் நடவடிக்கை முற்றிலும் தவறானது என்று மூத்த வழக்குரைஞரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் வாதாடினாா்.

மேலும், வருங்காலத்தில் மத்திய அரசு இதுபோன்ற முடிவை மேற்கொள்ளாமல் இருக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கை தவறான முடிவு என உச்சநீதிமன்றம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தியிருந்தாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com