ஹிமாசலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து மாநிலத்தில் காங்கிரஸினை யார் வழிநடத்தப் போகிறார்கள் என்பது குறித்து தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் மற்றும் ஹிமாசல் மாநிலத் தேர்தல் முடிவுகள் இன்று (டிசம்பர் 8) அறிவிக்கப்பட்டு வருகிறது. குஜராத்தில் பாஜகவும், ஹிமாசலில் காங்கிரஸும் ஆட்சியமைக்க உள்ளன. இந்த நிலையில், ஹிமாசலில் காங்கிரஸினை வழிநடத்தும் தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. அதன்படி, காங்கிரஸ் தலைவர் யார் ஹிமாசலை வழிநடத்த வேண்டும் என முடிவெடுப்பார் என்பதே அந்தத் தீர்மானம் ஆகும்.
இதையும் படிக்க: 'சிங்கிள்ஸ்' அதிகம் இருக்கும் நாடு தென்கொரியா! ஏன் தெரியுமா?
தேர்தல் வெற்றி குறித்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ராஜீவ் சுக்லா கூறியதாவது: ஹிமாசலில் ஆட்சியமைக்க காங்கிரஸுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. காங்கிரஸ் தங்களது 10 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்களுக்கு சிறப்பான நிர்வாகத்தை அளிக்கும். ஹிமாசலை வழிநடத்தும் தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. அதன்படி, காங்கிரஸ் தலைமை யார் ஹிமாசலை வழிநடத்தப் போகிறார்கள் என்பதை முடிவு செய்யும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்தப் பொறுப்பினை கவனிக்க பார்வையார்களாக சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் மற்றும் மூத்த தலைவர் பூபிந்தர் ஹூடா ஆகியோர் என்னுடன் அனுப்பப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் ஹிமாசல் மக்களுக்கு சிறந்த ஆட்சியினை கொடுக்கும். பாஜக அரசினால் மக்கள் நொந்து போய்விட்டனர். காங்கிரஸ் 40 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்றார்.
68 இடங்களைக் கொண்ட ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைக்கு நவம்பா் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று(டிச. 8) காலை முதல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.