குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அடைந்த வெற்றி சர்வதேச பத்திரிகைகளில் முதன்மைச் செய்திகளாக இடம்பெற்றுள்ளன.
182 தொகுதிகளுக்கு நடைபெற்ற குஜராத் தேர்தலில் 156 தொகுதிகளை பாஜக கைப்பற்றி இமாலய வெற்றியை பதிவு செய்தது. குஜராத் சட்டப்பேரவை வரலாற்றில் இதுவரை எந்தக் கட்சியும் இவ்வளவு அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றியதில்லை.
குஜராத்தின் 182 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு டிச. 1 மற்றும் 5 என இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று (டிச.8) காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில், பாஜக கட்சி 156 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 5 தொகுதிகளிலும், சமாஜவாதி 1 தொகுதியிலும், தனித்து போட்டியிட்டவர்கள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர்.
குஜராத் சட்டப்பேரவை வரலாற்றில் இதுவரை எந்தக் கட்சியும் இவ்வளவு அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றியதில்லை. இதற்கு முன் காங்கிரஸ் கட்சியானது 1985-ஆம் ஆண்டில் 149 தொகுதிகளைக் கைப்பற்றியதே சாதனையாக இருந்தது.
பிரிட்டிஷ் பத்திரிகையான தி கார்டியன், குஜராத் வெற்றியை மையப்படுத்தி 2024ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள பிரதமர் பதவிக்கான தேர்தலுக்கு முன்பு, பாஜகவுக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
1995ஆம் ஆண்டு முதல் குஜராத்தில் பாஜக கட்சி எப்படி தோல்வியடையாமல், வெற்றியை நிலைநாட்டுகிறது என்பது குறித்து ஜப்பானின் நிக்கேய் ஏசியா செய்தியாக வெளியிட்டுள்ளது.
இதேபோன்று இண்டிபென்டன்ட், ஏபிசி நியூஸ் ஆகியவை பாஜக தொண்டர்களின் வெற்றி கொண்டாட்டப் படங்களைப் பதிவிட்டு செய்தி வெளியிட்டுள்ளன.