அமராவதி: வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று இரவு கேளம்பாக்கம் அருகே கரையைக் கடந்தநிலையில் ஆந்திர மாநிலத்தில் சனிக்கிழமை அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
ஆந்திர மாநிலத்தின் தெற்கு கடற்கரை மாவட்டங்கள் மற்றும் ராயலசீமா மாவட்டங்களில் கனமழை பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க.. குஜராத்தில் காங்கிரஸ் அடைந்தது தோல்வியே அல்ல! அதற்கும் மேல்
ஆந்திர மாநில அரசு வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின் அடிப்படையில், திருப்பதி மாவட்டம் நாயுடுபேட்டை பகுதியில் இன்று காலை 8 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 281.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மேலும், சனிக்கிழமை காலை முதல் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்து வருவதாகவும், புயல் மற்றும் கனமழை தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகிறார்.
இதையும் படிக்க.. ஹிமாசலில் பாஜக எப்படி தோற்றிருக்கிறது என்று பாருங்கள்!
நிவாரண முகாம்களை திறந்து, தேவைப்படும் உதவிகளை வழங்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக வலுப்பெற்று பின்னர் புயலாக வலுவிழந்து நேற்றிரவு 10 மணியளவில் மாமல்லபுரம் அருகே கேளம்பாக்கம் பகுதியில் கரையை கடக்க தொடங்கியது.
சுமார் 5 மணிநேரத்திற்கு பிறகு அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்று காலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருக்கும் மாண்டஸ் புயல் பின்னர் படிப்படியாக வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.