உத்தரகண்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகம் அபராதம் வசூல் செய்துள்ளது.
முதலாமாண்டு மாணவர்களிடம் ராகிங்கில் ஈடுபட்ட 44 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக, அனைவரிடமும் தலா ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் ஹல்த்வானி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களிடம் சீனியர் மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர், கல்லூரி நிர்வாக்த்திடம் புகாரளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து , ஜூனியர் மாணவர்களிடம் ராகிங்கில் ஈடுபட்ட 44 மாணவர்கள் மீது கல்லூரி முதல்வர் கடும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 9ஆம் தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றுள்ளதாக கல்லூரி முதல்வர் குறிப்பிட்டுள்ளார். முதலாமாண்டு மாணவர்களிடம் ராகிங் செய்த மாணவர்களில் ஒருவர் விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு, ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய 43 மாணவர்களுக்கு தலா ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களிடம் ராகிங் என்ற பெயரில், தகாதவகையில் பேசியதாகவும், விடுதி அறைக்கு அழைத்துச்சென்று விடியோ பதிவு செய்ததாகவும் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பலருடன் கல்லூரி ராகிங் தடுப்புக் குழு ஆலோசனை நடத்திய பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.