சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியின் கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளிக்காமல், கட்டுப்பாட்டை இழந்து கோபத்துடன் பேசிய பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் செயலை பாஜக விமர்சித்து வருகிறது.
இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, நிதீஷ் குமாரின் காலம் முடிந்துவிட்டதாக பாஜக எம்.பி. சுஷில் மோடி விமர்சித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கட்டுப்பாட்டை இழந்து பேசிய பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் செயல் குறித்து சுஷில் மோடி பேசியதாவது,
''நிதீஷ் குமாருக்கான காலம் முடிந்துவிட்டது. அவர் தனது சுயநினைவை இழந்துவிட்டார். அவர் தனது பொறுமையையும் இழந்துவிட்டார். இதற்கு முன்பு அவருடைய சுபாவம் இப்படி இல்லை. அவரின் நேரம் முடிந்துவிட்டது.
தேஜஸ்வி யாதவ் (பிகாரின்) அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலை வழிநடத்துவார் என நிதீஷ் குறிப்பிட்டார். அவ்வாறு நிதீஷ் செய்தால், அதனால் பலன் அடைவது பாஜகதான். பிகாரில் கடந்த மூன்று முறை நடைபெற்று முடிந்த 3 இடைத்தேர்தல்களில் பாஜக குறிப்பிடத்தகுந்த வாக்குகளைப் பெற்றுள்ளது என சுஷில் மோடி குறிப்பிட்டார்.
பிகார் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று (டிச.14) நடைபெற்றது. இதில் பிகார் மாநிலம் சாரன் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தொடர் உயிரிழப்புகள் குறித்து ஆளும் கட்சியை விமர்சித்து பாஜக எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார். இதனால் பொறுமையை இழந்த முதல்வர் நிதீஷ் குமார், கட்டுப்பாட்டை இழந்து பேசினார்.