பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.
பிகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் சாப்ரா பகுதியில் உள்ள கள்ளச்சாராயம் அருந்தியவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிலர் கடந்த திங்கள்கிழமையும் சிலர் செவ்வாய்க்கிழமையும் கள்ளச்சாராயம் அருந்தியதாகக் கூறப்படுகிறது.
முதலில் 5 பேர் உயிரிழந்த நிலையில் படிப்படியாக அதிகரித்து தற்போது உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 50 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களுக்குக் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பது தொடர்ந்து நடந்தாலும் தற்போது உயிரிழப்பு அதிகரித்துள்ளதால் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
பிகார் முதல்வர் நிதீஷ் குமாரும் இதுகுறித்து, கள்ளச்சாராயம் அருந்தினால் உயிரிழக்க நேரிடும் என்பது இன்றைய சம்பவமே உதாரணம் என்று தெரிவித்தார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு பிகாரில் மது விற்பனை செய்யவும் அருந்தவும் மாநில அரசு தடை விதித்தும் இதுபோன்ற சம்பவங்கள் அங்கு தொடர்வது குறிப்பிடத்தக்கது.