புதுதில்லி: தில்லியில் உள்ள 1,800க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 2023-24 கல்வியாண்டுக்கான சேர்க்கை பதிவு செயல்முறை நாளையுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. இதற்கான நடைமுறை டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கியது.
நர்சரி சேர்க்கைக்கான படிவத்தை நிரப்ப குழந்தைக்கு குறைந்தது நான்கு வயதாக இருக்க வேண்டும். மார்ச் 31, 2023 தேதியின்படி மழலையர் பள்ளியில் சேருவதற்கு வயது வரம்பு ஐந்து ஆண்டுகள் என நிர்ணியக்கப்பட்டுள்ள நிலையில் 1-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி அரசின் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, முதலில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர்கள் மற்றும் காத்திருப்புப் பட்டியல் ஜனவரி 20ஆம் தேதி வெளியிடப்படும். நுழைவு நிலை வகுப்புகளில் சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் இரண்டாவது பட்டியல் பிப்ரவரி 6ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்படும். இந்த அட்டவணையில் இருந்து எந்த விலகலும் அனுமதிக்கப்படாது. ஒவ்வொரு பள்ளியும் மேற்கூறிய சேர்க்கை அட்டவணையை அதன் அறிவிப்பு பலகை மற்றும் இணையதளத்தில் வெளியிடவேண்டும்.
ஒவ்வொரு பள்ளியும் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி வரை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தில்லி கல்வி இயக்குநரகம் அதன் சுற்றறிக்கை தெரிவித்துள்ளது.
சேர்க்கை பதிவுக் கட்டணமாக ரூ.25 மட்டுமே வசூலிக்க வேண்டும். சுற்றறிக்கையின்படி, அனைத்து தனியார் பள்ளிகளும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.