ஆந்திரத்தில் சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் நிவாரணம் அறிவித்துள்ளனர்.
நெல்லூர் மாவட்டம் கண்டுகூர் நகரில் ஆந்திரத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் மக்கள் அதிகளவில் திரண்டதால், கூட்டத்தின் போது வடிகால் கால்வாயின் சிமெண்ட் தளம் உடைந்து அதனுள் பலர் விழுந்தனர். இதில் ஒரு பெண் உள்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர்.
விபத்தை அடுத்து கூட்டத்தை உடனடியாக ரத்து செய்தார் சந்திரபாபு நாயுடு. மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியாக அறிவித்தார். மேலும் அந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இதேபோன்று, ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி இச்சம்பவம் குறித்து அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000ம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.