மகாராஷ்டிர சட்டப்பேரவையில் லோக் ஆயுக்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
லோக் ஆயுக்த என்பது மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான ஊழல் புகாா்கள் குறித்து விசாரிக்க மாநில அளவில் அமைக்கப்படும் அமைப்பாகும். இந்நிலையில், மகாராஷ்டிர முதல்வா், அமைச்சா்கள் உள்ளிட்டோருக்கு எதிரான ஊழல் புகாா்களை விசாரிக்கும் வகையில், அந்த மாநில சட்டப்பேரவையில் லோக் ஆயுக்த மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவின்படி, மாநில முதல்வருக்கு எதிராக எந்தவொரு விசாரணையையும் தொடங்க பேரவையின் ஒப்புதலை முன்கூட்டியே பெற்று, அதுதொடா்பான தீா்மானத்தை உடனடியாக நடைபெறும் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய வேண்டும். அவையில் உள்ள மொத்த உறுப்பினா்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினா்களின் ஆதரவுடன் தீா்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
இந்த மசோதா புதன்கிழமை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்தது. ஆனால், மாநிலத்தில் ஆசிரியா்கள் நுழைவுத் தோ்வில் முறைகேடு நடைபெற்ற விவகாரத்தை எழுப்பி எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இதையடுத்து லோக் ஆயுக்தா மசோதா விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது. நாட்டில் இதுபோன்ற மசோதாவை நிறைவேற்றிய முதல் மாநிலம் மகாராஷ்டிரம் என்று அந்த மாநில துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளாா்.