பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி ஸ்ரீ சம்கௌர் சாஹிப் தொகுதியில் போட்டியிட இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை பொருத்தவரை ஆளும் காங்கிரஸ், பாஜக கூட்டணி, ஆம் ஆத்மி என பலமுனைப் போட்டி நிலவுகின்றது.
அமரீந்தர் சிங் விலகிய பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட சரண்ஜீத் சிங் மற்றும் கட்சியின் தலைவர் சித்து ஆகியோரின் தலைமையில் காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்திக்கவுள்ளது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் ஸ்ரீ சம்கௌர் சாஹிப் தொகுதியில் போட்டியிட சரண்ஜீத் சிங் சன்னி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
முன்னதாக, பதௌர் தொகுதியில் போட்டியிடுவதற்காக திங்கள்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.