சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களுக்கு 15 சிறப்புப் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தேர்தல் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக அவர்களுடன் ஆலோசனையும் நடைபெற்றது.
கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்புப் பார்வையாளர்களுடன் இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று இரவு ஆலோசனை மேற்கொண்டது. இதில் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
சிறப்பு பார்வையாளர்களின் பணிகள்:
தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு பார்வையாளர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் மேற்கொள்ளும் பணிகளை மேற்பார்வை செய்து கண்காணிப்பார்கள்.
உளவுத்துறை உள்ளீடுகள், சி-விஜில், வாக்காளர் உதவி இணைப்பு - ஹெல்ப்லைன் போன்றவற்றின் மூலம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் கடுமையான, பயனுள்ள அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வார்கள்.
சுதந்திரமான, நியாயமான, வாக்காளர்களுக்கு இணக்கமான தேர்தலை உறுதி செய்வதற்காக தேர்தல் ஆணையத்தின் கண்களாகவும், காதுகளாகவும் செயல்பட்டு ஒட்டுமொத்தத் தேர்தல் செயல்முறைகளையும் இந்த அதிகாரிகள் கண்காணிப்பார்கள்
இது குறித்து பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, சிறப்பு பார்வையாளர்களை தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு அனுப்புவதன் முக்கிய நோக்கம், தேர்தல் தயார்நிலையைப் பாரபட்சமற்ற முறையில் மதிப்பிடுவது.
மேலும், தேர்தலில் முக்கியமான இடைவெளிகளைக் கண்டறிந்து, பாரபட்சமற்ற, தூண்டுதலற்ற, அமைதியான, கோவிட் பாதுகாப்பான தேர்தலை உறுதிசெய்யத் தேர்தல் இயந்திரங்களை வழிநடத்துவதே நோக்கம்.
இதோடு மட்டுமின்றி சிறப்புப் பார்வையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்; தேர்தல் செயல்முறை முழுவதும் அப்போதைக்கு அப்போது என்ற அடிப்படையில் தேர்தல் ஆணையத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும்; தேவைப்படும் திருத்த நடவடிக்கைகளை ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.