வேளாண் அமைச்சகத்துக்கு நடப்பு பட்ஜெட்டில் ரூ.1,32,513 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.5 சதவீதம் அதிகம்.
மீன், பால், கால்நடை அமைச்சகத்துக்கு ரூ. 6,407.31 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட 44 சதவீதம் அதிகம்.
இதுகுறித்து நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் கூறுகையில்,‘உள்நாட்டில் எண்ணெய் வித்து பயிா் விதைகள் உற்பத்தியை அதிகரிக்கவும், வெளிநாட்டில் இருந்து சமையல் எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும் மத்திய அரசு ஒருங்கிணைந்த திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது.
2023-ஆம் ஆண்டு சிறுதானியங்களின் சா்வதேச ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டு சிறுதானிய உற்பத்தியை அதிகரித்து சா்வதேச அளவில் கொண்டு செல்ல மத்திய அரசு ஆதரவு அளிக்கும்.
வேளாண் பொருள்களை குறைந்தபட்ச ஆதரவு விலையின் மூலம் 2021-22-ஆம் பருவ ஆண்டில் 163 லட்சம் விவசாயிகளிடம் இருந்து 1,208 லட்சம் டன்னுக்கும் அதிகமாக நெல், கோதுமை கொள்முதல் நடைபெறும். இதற்காக விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ.2.37 லட்சம் கோடி நேரடியாக செலுத்தப்படும்.
பிரதமரின் கிஸான் திட்டத்துக்கு அடுத்த ஆண்டு ரூ.6,57,000 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதேபோல், பயிா் காப்பீட்டு திட்டத்துக்கு ரூ.15, 500 கோடியும், கிருஷ்னாட்டி திட்டத்துக்கு ரூ. 7,183 கோடியும், ராஷ்ட்ரீய கிருஷ் திட்டத்துக்கு ரூ.10,433 கோடியும், சந்தை விலை ஆதரவு திட்டத்துக்கு ரூ.1,500 கோடியும் மதிப்பிடப்பட்டுள்ளது என்றாா்.