2022-23-ஆம் நிதியாண்டில் நாடு முழுவதும் புதிதாக 25,000 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை வாசித்த நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், அரசு-தனியாா் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும். வரும் 2022-23-ஆம் நிதியாண்டில் நாட்டில் 4 இடங்களில் சரக்கு முனையங்கள் அமைக்கப்படும். இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக, புதுமையான வழிமுறைகளில் ரூ.20,000 கோடி திரட்டப்படும். மக்கள் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து ஆகியவற்றை துரிதப்படுத்துவதற்காக விரைவு வழிச் சாலைகளுக்கான உத்வேகத் திட்டம், வரும் நிதியாண்டில் வகுக்கப்படும்.
மலைப்பகுதிகளில் சாலை வசதி அமைக்க முடியாத இடங்களில் ரோப் வழித்தடம் அமைக்கப்படும். வரும் நிதியாண்டில் 60 கி.மீ. தொலைவுக்கு 8 ரோப் வழித்தடம் அமைக்க ஒப்பந்தப் பணி வழங்கப்படும் என்றாா் அவா்.