பாட்னா: அப்போதெல்லாம் தெருவிளக்கு வெளிச்சத்தில் தான் படித்தோம் என்பதை பல முதியவர்கள் பெருமையாகச் சொல்வார்கள். இன்று இந்த அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்தும் கூட, பிகாரில், வாகனங்களின் விளக்கு வெளிச்சத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு நடைபெற்றிருக்கிறது என்று சொன்னால்.. என்ன செய்ய முடியும்?
பகிர் மாநிலம் கிழக்கு சாம்பரானின் மோதிஹாரி நகரில் அமைந்துள்ள ஒரு கல்லூரியில் நேற்று 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹிந்தி தேர்வு நடைபெற்றது.
மகாராஜா ஹரேந்திர கிஷோர் சிங் கல்லூரியில் 400 மாணவர்கள் தேர்வெழுத வந்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாததால், மாணவர்களும் பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கல்லூரி நிர்வாகம் சமாதானம் செய்துவைத்து தேர்வெழுத அழைத்து வந்தனர். வழக்கமாக தேர்வு 1.45 மணிக்குத் தொடங்கி 5 மணிக்கு நிறைவடைய வேண்டும். ஆனால் போராட்டம் காரணமாக தேர்வு 4 மணிக்குத்தான் தொடங்கியது. 6 மணிக்கு இருட்டத் தொடங்கியதும்தான் கல்லூரியில் மின்சார சேவையே இல்லை என்பது தெரிய வந்தது. கல்லூரி தரப்பில் ஜெனரேட்டர் கொண்டு வந்தாலும், அது அனைத்து வகுப்புகளுக்கும் போதவில்லை.
இதையும் படிக்க.. தடாலடியாக இப்படிச் செய்ய வேண்டாம்: எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு
இதனால், மாணவர்களை அழைத்து வந்த பெற்றோர், தங்களது கார் உள்ளிட்ட வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டு, அதில் அமர்ந்து மாணவர்களை தேர்வெழுத வைத்தனர்.
இது குறித்து பல்வேறு தரப்பினரும் புகார் அளிக்க மாவட்ட கல்வி நிர்வாகம் சார்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.