புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 57 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 167.29 கோடியைத் தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 57,42,659 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து இன்று காலை 7 மணிவரை நிலவரப்படி, 1,83,99,537 தடுப்பூசி மையங்கள் மூலம் இதுவரை மொத்தம் 1,67,29,42,707 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
"நாடு முழுவதும் பரிசோதனைகள் தொடர்ந்து அதிகப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 17,42,793 பரிசோதனை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இதுவரை 73.24 கோடி (73,24,39,986) சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது" என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | நாட்டில் புதிதாக 1.61 லட்சம் பேருக்கு கரோனா; 1,733 பேர் பலி
நாடு முழுவதும் தொற்று பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் வாராந்திர தொற்று விகிதம் தற்போது 14.15 சதவிகிதமாக உள்ளது மற்றும் தினசரி தொற்று விகிதம் 9.26 சதவிகிதமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,61,386 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 16,21,603 ஆக உள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2,81,109 பேர் தொற்று குணமடைந்துள்ளனர். இதையடுத்து தொற்றில் இருந்து குணடைந்தோரின் எண்ணிக்கை 3,95,11,307 ஆக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, இந்தியாவின் மீட்பு விகிதம் 94.91 சதவிகிதமாக உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.