குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான உரையின்போது, நாடாளுமன்ற விதிகளை முறையாக பின்பற்றவில்லை என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு மக்களவை தலைவர் ஓம் பிர்லா பாடம் எடுத்துள்ளார்.
பேசிக் கொண்டிருந்தபோது, நீங்கள் பேசவும் என பாஜக எம்பியை ராகுல் காந்தி கேட்டு கொண்டார். அப்போது, குறுக்கிட்ட ஓம் பிர்லா, "அனுமதி அளிப்பதற்கு நீங்கள் யார்? நீங்கள் அனுமதி அளிக்க முடியாது. அது என்னுடைய உரிமை. யாரை பேச வேண்டும் என சொல்வதற்கு உங்களுக்கு உரிமை இல்லை. மக்களவை தலைவருக்கு மட்டுமே அந்த உரிமை உண்டு" என்றார்.
புதன்கிழமை மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, பல்வேறு விவகாரங்களை முன்வைத்து மத்திய அரசை கடுமையாக சாடினார். சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் பின்பற்றப்பட்ட குறைபாடுள்ள கொள்கையால் இரு வேறு இந்தியா உருவாகியுள்ளதாக அவர் கூறினார்.
இதற்கு மத்தியில், உட்கார்ந்திருந்த பாஜக எம்பி கம்லேஷ் பஸ்வான் எழுந்து நின்று பேட முற்பட்டார். அப்போது, பேசுவை நிறுத்திய ராகுல் காந்தி, "நான் ஒரு ஜனநாயகவாதி. மற்றவர்கள் பேச அனுமதி தருவேன்" எனக் கூறினார். இதற்கு, ஓம் பிர்லா கோபமாக பதிலளித்தார்.
இதையும் படிக்க | ஏழைகள் - பணக்காரா்கள்: இரு வேறு இந்தியா
பின்னர் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "நீங்கள் யாருடைய பேச்சையும் கேட்பதில்லை, பாஜகவில் உள்ள என் அன்பு சகோதரன் மற்றும் சகோதரியின் பேச்சைக் கூட கேட்பதில்லை. இன்று எனது தலித் சகோதரன் பஸ்வான் பேசுவதைப் பார்த்தேன். அவருக்கு தலித் வரலாறு தெரியும்.
3000 ஆண்டுகளாக தலித்துகளை ஒடுக்கியது யார் என்பது அவருக்குத் தெரியும். ஆனால் அவர் தயக்கத்துடன் பேசுகிறார். அவரை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த மனிதரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். அவர் மனதில் உள்ளதை என்னிடம் பேசியிருக்கிறார். ஆனால் அவர் தவறான கட்சியில் இருக்கிறார். கவலைப்படாதே. பீதி அடைய வேண்டாம்" என்றார்.