புதிதில்லி: நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதை கண்டித்து மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
நீட் விலக்கு கோரும் மசோதாவை ஆளுநா் ஆா்.என்.ரவி, நேற்று சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவுவுக்கு மீண்டும் அனுப்பி வைத்தாா்.
நீட் விலக்கு கோரும் மசோதாவை திருப்பி அனுப்பி வைத்து, அதற்காக ஆளுநா் தெரிவித்துள்ள கருத்துகள் தமிழ்நாட்டு மக்களால் ஏற்கத்தக்கவை அல்ல என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
இந்நிலையில், ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். பின்னர் ஆளுநரின் செயல் குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிக்க | நீட் விவகாரம்: சட்டமன்ற கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் கடிதம்
மேலும் ஒரு மாநில சட்டப்பேரவை அனுப்ப கூடிய மசோதாவை ஒரு ஆளுநர் எப்படி திருப்பி அனுப்ப முடியும் என கேள்வி எழுப்பிய திமுக உறுப்பினர் திருச்சி சிவா, இதுதொடர்பாக விவாதம் நடத்தக் கோரி நோட்டீஸ் அளித்தார். அதற்கு மறுப்பு தெரிவித்த மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு, கேள்வி நேரத்தின் போது பேச முடியாது. குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானங்கள் மீது பேசுங்கள் என கூறியதுடன் கேள்விநேரம் தேவையில்லை என்றாலும் பரவாயில்லை, திமுக கோரிக்கையை விவாதிக்க முடியாது என நாயுடு திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையடுத்து திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.