புது தில்லி: நாட்டில் தற்போது பதவியிலிருக்கும் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகள் 2018ஆம் ஆண்டு 4,110-லிருந்து, 2021 டிசம்பரில் 4,984 ஆக அதிகரித்திருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற நண்பராக (அமிகஸ் கியூரி) செயல்படும் மூத்த வழக்குரைஞர் விஜய் ஹன்சாரியா தாக்கல் செய்த அறிக்கையில், இந்த வழக்குகளில் சில 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. 2,324 வழக்குகள் தற்போது பதவியிலிருக்கும் எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரானது. 1,675 வழக்குகள் முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கு எதிரானவை. 264 வழக்குகள், நீதிமன்ற தடை உத்தரவுகளால் நிலுவையில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 1,339 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிகாரில் 571 வழக்குகளும் நிலுவையில் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.