ஜெருசலேம்: ஒருவரின் உடலில், வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டிருப்பது, கரோனா பாதிப்பு தீவிரமடையவும், கரோனாவுக்கு பலியாகும் அபாயமும் அதிகம் இருப்பதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பொதுவாக, உடலில் வைட்டமின் டி குறைபாடு எலும்பு வளர்ச்சியை பாதிக்கும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது, வைட்டமின் டி குறைபாட்டால், உடலில் நோய் எதிர்ப்பாற்றல் குறைவு, இதய நோய்கள், விரைவில் தொற்று நோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
கரோனா இரண்டாம் அலையின்போதே, சுகாதாரத் துறை சார்பில், கரோனா நோயாளிகளுக்கு வைட்டமின் டி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளுப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதற்குக் காரணம், கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் கிடைப்பதற்காகத்தான் என்பது தற்போது புரிய வந்துள்ளது.
இஸ்ரேலில் உள்ள பார்-இலன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், கரோனா பாதித்த நோயாளிகளில், வைட்டமின் டி குறைபாடு இருப்பவர்களுக்கு கரோனா தொற்று தீவிரமடையும் அபாயம் 14 மடங்கு அதிகமாக இருப்பதாகவும், வைட்டமின் டி மிகவும் குறைவாக இருப்பவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாகும் அபாயம் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
அதாவது, வைட்டமின் டி போதிய அளவில் இருக்கும் கரோனா நோயாளிகளின் பலி விகிதம் 2.3 சதவீதமாகவும், வைட்டமின் டி பற்றாக்குறை நோயாளிகள் மரணமடையும் விகிதம் 25.6 சதவீதமாகவும் இருக்கிறது.
பிஎல்ஓஎஸ் ஒன்ற என்ற மருத்துவ இதழில், இந்த ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது.
எங்களது ஆய்வின் மூலம், ஒருவர் தேவையான அளவு வைட்டமின் டி இருக்குமாறு கவனித்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை ஒருவருக்கு கரோனா பாதித்தால், அவர்களுக்கு வைட்டமின் டி பெரிய உதவி புரியும் என்கிறார் இந்த ஆய்வுக் குழுவின் தலைவர் அமியெல் டிரோர்.