உத்தரப் பிரதேச தேர்தல் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடுவோர் வேட்புமனுவை தாக்கல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று மனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கும் தருவாயில் அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் உபேந்திர திவாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஓடோடி வந்தது சிரிப்பலையை ஏற்படுத்தியது. வேட்பு மனுவை தாக்கல் செய்தவற்காக பல்லியா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு அவர் வேகமாக ஓடிவந்த விடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.
ஃபெஃப்னா தொகுதியில் பாஜக சார்பாக அவர் போட்டியிடுகிறார். காவி தலைப்பாகை அணிந்தபடி தோளில் மாலையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முக்கிய நுழைவாயிலிருந்து மனு தாக்கல் செய்வதற்கான அறைக்கு அவர் ஓடிவருவதை விடியோவில் காணலாம்.
மனு தாக்கல் செய்வதற்கு கடைசி தேதி பிப்ரவரி 11ஆம் தேதியாக இருந்தபோதிலும், வெள்ளிக்கிழமையன்று மனு தாக்கல் செய்தவற்கு அவர் ஓடிவந்துள்ளார். அவருக்கு பின், அவரது உதவியாளரும் வேகமாக பின் தொடர்கிறார்.