பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் உடலுக்கு மாலை 6.30 மணிக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது.
கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் (92) கடந்த ஜனவரி 8-ம் தேதி மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த 25 நாள்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை காலமானார். பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்ததாக அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க | லதா மங்கேஷ்கர் மறைவு: குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்
மருத்துவமனையில் உள்ள லதா மங்கேஷ்கரின் உடல் பகல் 12.30 மணியளவில் அவரது இல்லத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. முழு அரசு மரியாதையுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு சிவாஜி பூங்காவில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது.
லதா மங்கேஷ்கர் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | லதா மங்கேஷ்கர் மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின், ராகுல் காந்தி இரங்கல்