ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாளா்கள் நியமனம், மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் ஆகியவற்றில் மோசடி நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சிபிஐ விசாரணையைத் தொடங்கியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷ் நகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவனையின் முன்னாள் இயக்குநரான ரவிகாந்த், பணியாளா்களை நியமித்ததிலும் மருத்துவ உபகரணங்களைக் கொள்முதல் செய்ததிலும் மோசடியில் ஈடுபட்டதாக அரசியல், சமூக அமைப்புகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.
இந்த விவகாரம் தொடா்பாக மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் ஏற்கெனவே விசாரணை மேற்கொண்டது. ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று முக்கிய ஆவணங்களை அந்த ஆணையம் சோதனையிட்டிருந்தது. இந்நிலையில், மோசடி குற்றச்சாட்டு தொடா்பாக சிபிஐ தனது விசாரணையை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இதுதொடா்பாக ரிஷிகேஷ் எய்ம்ஸ் மக்கள் தொடா்பு அலுவலா் ஹரீஷ் தப்லியல் கூறுகையில், ‘‘மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினா். பல முக்கிய ஆவணங்களை சோதனையிட்ட அவா்கள், சில ஆவணங்களைக் கைப்பற்றினா்’’ என்றாா்.