புது தில்லி: ஐந்து முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி தேவையில்லை என்றும், அதன் தேவையை உறுதி செய்யும் எந்த தரவுகளும் இல்லை என்றும் இந்தியாவின் புகழ்பெற்ற தொற்றுநோயியல் துறை நிபுணர் டாக்டர் ககன்தீப் காங் தெரிவித்துள்ளார்.
வேலூரில் அமைந்துள்ள சிஎம்சி மருத்துவமனையின் பேராசிரியர் டாக்டர் காங், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு அவர் அளித்த பேட்டியில், டென்மார்க், ஸ்வீடன் உள்ளிட்ட உலக நாடுகள் பலவும், 5 - 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தத் தேவையில்லை என்று முடிவு செய்துவிட்டன.
இதையும் படிக்க.. அவிநாசியில் விஏஓ லஞ்சம் பெறுவது தொடர்பான பட்டியலால் பரபரப்பு
"ஐந்து முதல் 12 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி எதுவும் தேவையில்லை. குழந்தைகளுக்குப் பாதுகாப்பான், நீண்ட நாள்களுக்கு கரோனாவிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் தடுப்பூசியை நாம் கண்டறியும் வரை, 15 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான குழந்தைகளுக்கு தடுப்பூசி அவசியமில்லை. ஆனால், அதுபோன்றதொரு தடுப்பூசி இதுவரை கண்டறியப்படவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
எனது குழந்தைக்கு கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று வந்தால், அது எனக்கு கவலைதரும் விஷயம்தான். அதனை உறுதிசெய்யும் தரவுகள் எதுவும் இல்லை என்கிறார் அவர்.
இந்தியாவில், இதுவரை 15 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. நிபுணர்களின் கருத்துகள் கோரப்பட்டுள்ளது.
மேலும், காங் கூறுகையில், குழந்தைகளுக்கு பாதிப்புக் குறைவு. மேலும், குழந்தைகளுக்கு தரமான முகக்கவசங்கள் வழங்கப்பட்டால், தொற்று பாதிப்பு அபாயம் மேலும் குறையும். பள்ளிகள் நல்ல காற்றோட்டமானதாக அமைந்தால் அச்சப்பட வேண்டாம். ஒரு வேளை, இணை நோய் ஏதேனும் இருந்தால், அந்தக் குழந்தைகளுக்கு மட்டும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படலாம் என்கிறார்.
அதேவேளையில், 15 - 18 வயதுக்குட்பட்ட 1 கோடி சிறார்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.