உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ராம்பூர் பகுதியில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
ஐந்து மாநிலத் தேர்தலில் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் இன்று (பிப். 10) தொடங்கி மாா்ச் 7 வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதையொட்டி கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. முதல்கட்ட வாக்குப்பதிவு 11 மாவட்டங்களுக்குள்பட்ட 58 தொகுதிகளில் இன்று காலை7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனிடையே, அடுத்தகட்ட வாக்குபதிவுகள் நடைபெறும் இடங்களில் கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று ராம்பூர் பகுதியில் சாலை பேரணியில் ஈடுபட்டுள்ளார். செல்லும் வழியில் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டு வருகிறார்.
வேலைவாய்ப்பின்மை, பெண்கள், தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள், வறுமை, பணவீக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள் என்று கூறினார்.
மேலும், இருசக்கர வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் தொழிலாளி ஒருவரிடம் பிரியங்கா காந்தி கலந்துரையாடினார்.