இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் இன்று மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ஒமைக்ரான் கண்டறியப்பட்டபோது அமலான 'கரோனா ஆபத்து அதிகமுள்ள நாடுகள்' பட்டியல் இன்று நீக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஏழு நாள்கள் வரை வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும் என்ற விதி அமலில் இருந்தது. அதற்கு பதிலாக, 14 நாள்கள் வரை தங்களை தானே சுயமாக கண்காணித்து கொள்ள வேண்டும் என வெளிநாட்டு பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த புதிய பாதுகாப்பு வழிமுறைகள் பிப்ரவரி 14ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மாறுதலுக்குள்ளாகும் கரோனாவை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேபோல, பொருளாதார செயல்பாடுகள் எந்த ஒரு தடையும் இன்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, கடந்த 14 நாள்கள் வரையிலான பயண விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை 'ஏர் சுவிதா' என்ற இணையதளத்தில் வெளிநாட்டு பயணிகள் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
இதையும் படிக்க | உ.பி: முதல் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது
பயணத் தேதியிலிருந்து 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டி-பிசிஆர் நெகட்டிவ் சோதனை சான்றிதழையும் அவர்கள் பதிவேற்ற வேண்டும். இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழையும் வெளிநாட்டு பயணிகள் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.