வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டமானது மும்பையில் நடைபெற்றது. கடந்த 9 முறை வட்டி விகிதத்தில் மாற்றமில்லாமல் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த கூட்டம் அனைவரின் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சக்திகாந்த தாஸ்,
“வங்கிகளுக்கான ரெப்போ குறுகிய காலக் கடன் வட்டி விகிதம் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35 சதவீதமாக தொடரும் எனத் தெரிவித்தார்.
மேலும், பணப்புழக்கத்தை தற்போதைய நிலையிலேயே வைத்திருக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. சர்வதேச நிதியத்தின் கணிப்பின்படி, உலகிலேயே அதிவேகத்தில் இந்திய பொருளாதாரம்தான் வளர்கிறது. வரும் நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மத்திய பொருளாதார ஆய்வறிக்கையில் வளர்ச்சி விகிதம் 8 முதல் 8.5 சதவீதமாக இருக்கும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.