உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில பேரவைத் தேர்தல்களில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
"ஏஎன்ஐ' செய்தி நிறுவனத்துக்கு பிரதமர் மோடி அளித்த சிறப்புப் பேட்டியின் விவரம்:
"பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் ஆளும் அரசுக்கு எதிரான அலை இல்லை. ஆகையால், இந்தத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். தேர்தல் எங்களுக்கு திறந்தநிலை பல்கலைக்கழகமாகும். வெற்றி அல்லது தோல்வி எது கிடைத்தாலும் சுய பரிசோதனை வாய்ப்பாக கருதுவோம்.
வாரிசு அரசியல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரியாகும். சமாஜவாதி கட்சி வாரிசு அரசியலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அக்கட்சித் தலைவரின் குடும்பத்தைச் சேர்ந்த 45 பேர் பல்வேறு பதவிகளை வகித்ததாக எனக்கு கடிதம் வந்தது.
உத்தர பிரதேசம், தமிழகம், ஹரியாணா, ஜார்க்கண்ட ஆகிய மாநிலங்களில் உள்ள கட்சிகளிலும் இந்த வாரிசு அரசியல் உள்ளது. குடும்பக் கட்சியால் ஜனநாயகத்துக்கு ஆபத்து.
லக்கீம்பூர் கெரி விவசாயிகள் வன்முறை வழக்கில் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ரா கைதாகி சிறையில் உள்ள விவகாரத்தில், உச்சநீதிமன்றம் நடத்தும் விசாரணையில் உத்தர பிரதேச அரசு வெளிப்படையாக செயல்பட்டு வருகிறது.
பஞ்சாபில் எனது வாகனம் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தில், எனது கருத்து உச்சநீதிமன்ற விசாரணையை பாதிக்கும் என்பதால் கருத்து தெரிவிக்க மாட்டேன்.
நாடாளுமன்றத்தில் முக்கிய விவகாரங்களில் மத்திய அமைச்சர்கள் விரிவான விளக்கங்கள் அளிக்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அவையில் அமர்வதும் இல்லை; கவனத்துடன் பதிலை கேட்பதும் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் நான் எப்படி அவருக்கு பதிலளிப்பது?
விவசாயிகள் நலனுக்காக கொண்டுவரப்பட்ட புதிய வேளாண் சட்டங்கள் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு திரும்பப் பெறப்பட்டன. எதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது எதிர்கால நிகழ்வுகள் தெளிவுபடுத்தும் என்றார்.