உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு வியாழக்கிழமை (பிப்.10) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
காலை 9:30 மணி நிலவரப்படி 7.95 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
403 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் பேரவைத் தேர்தல் இன்று வியாழக்கிழமை முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10 ஆம் தேதி நடைபெறுகிறது.
முதல் கட்டத் தோ்தல், மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள ஷாம்லி, ஹாபூா், கௌதம்புத்தா நகா், முசாஃபா்நகா், மீரட், காஜியாபாத், புலந்த்சாஹா், அலிகா், மதுரா, ஆக்ரா, பாக்பத் ஆகிய 11 மாவட்டங்களுக்கு உள்பட்ட 58 தொகுதிகளில் 10,766 வாக்குச்சாவடி மையங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தேர்தல் ஆணைய அறிக்கையின் படி, மதுரா தொகுதியில் 8.23% வாக்குகளும், ஆக்ராவில் 7.64 % வாக்குகளும், பாக்பத் தொகுதியில் 8.93% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
மேலும் அலிகா் தொகுதியில் 8.39% வாக்குகளும், கௌதம்புத்தா நகா் தொகுதியில் 8.07% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
சட்டசபை தேர்தலின் முதல் கட்ட தேர்தலில் சுமார் 2.27 கோடி வாக்காளர்கள் 623 வேட்பாளர்களின் தலைவிதியை முடிவு செய்ய உள்ளனர்.
இதையும் படிக்க | ராமானுஜர் சிலை 'மேட் இன் இந்தியா' அல்ல 'மேட் இன் சீனா': ராகுல்