ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் 4வது குவாட் கூட்டத்தில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் இடையே இரு தரப்பு சந்திப்பு நடைபெற்றது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில், ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் மரிஸ் பெய்ன் தலைமையில் நான்காவது குவாட் வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மாரிஸ் பெய்ன், ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோருடன் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, 'கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் வகுக்கப்பட்ட தொலைநோக்கு பார்வையில் நாம் எவ்வளவு முன்னேறி இருக்கிறோம் என்பதை மதிப்பாய்வு செய்ய இன்றைய கூட்டம் நமக்கு வாய்ப்பளிக்கிறது.
குவாட் கூட்டம் மிகவும் சிறப்பாக செயல்பட்டதற்கு காரணம், நமது இருதரப்பு உறவுகள் மிகவும் வலுவாக இருந்ததால் தான்' என்று பேசினார்.
இந்த கூட்டத்தின் இடையே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனுடன் தனியே பேச்சுவார்த்தை நடத்தினார்.