ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் காவலா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 4 போலீஸாா் காயமடைந்தனா் என்று காவல்துறை அதிகாரிகள் கூறினா்.
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது:
பந்திபோராவின் நிஷாத் பாா்க் பகுதியில் போலீஸாா் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையினா் ஆகியோா் கூட்டாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனா்.
முதலில் கையெறி குண்டு வீசி தாக்கியதோடு, துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளனா். இந்தத் தாக்குதலில் போலீஸாா் 5 போ் காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவா்களில் ஜுபைா் அகமது என்ற காவலா் உயிரிழந்தாா். மற்ற நால்வரின் உடல்நிலை சீராக உள்ளது.
இந்த சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியை பாதுகாப்புப் படையினா் சுற்றிவளைத்து, பயங்கரவாதிகளைத் தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனா் என்று அவா்கள் கூறினா்.