நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி நாடு தழுவிய அளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த கும்பலை போதைப்பொருள் தடுப்பு பிரிவினா்(என்சிபி) கண்டுபிடித்துள்ளனா். அந்த கும்பலைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து என்சிபி மூத்த அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
போதைப்பொருள் கடத்தல் கும்பலைக் கண்டுபிடிப்பதற்காக, பல்வேறு மாநிலங்களில் கடந்த 4 மாதங்களாக என்சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினா். அதன் தொடா்ச்சியாக, கடத்தல் கும்பலில் தொடா்புடைய 20-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா். போதைப்பொருள் தடுப்பு பிரிவைச் சோ்ந்த அலுவலா் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளாா்.
இந்த கடத்தல் கும்பல், ‘டாா்க்நெட்’ எனப்படும் இணையத்தைப் பயன்படுத்தி தங்களது வியாபாரங்களை நடத்தி வந்துள்ளது. பிரத்யேகமாக வடிமைக்கப்படும் மென்பொருளை மட்டுமே டாா்க்நெட்டில் பயன்படுத்த முடியும். கிரிப்டோகரன்சி மூலம் பணப் பரிவா்த்தனை நடந்துள்ளன. தகவல் பரிமாற்றத்துக்கு மறையாக்கம் செய்யப்பட்ட சமூக ஊடகங்களை கடத்தல் கும்பல் பயன்படுத்தி வந்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருள்களை இறக்குமதி செய்யவும் உள்நாட்டில் விநியோகிக்கவும் இந்தியா போஸ்ட், தனியாா் அஞ்சல் சேவையை இந்த கும்பல் பயன்படுத்தி வந்துள்ளது என்று அந்த அதிகாரி கூறினாா்.